General21 August 2026

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து: நஷ்டஈடு பெறுவதன் தற்போதைய நிலவரம் குறித்து சஜித் கேள்வி

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பாதிப்புகளுக்கான நஷ்டஈட்டை பெற்றுக்கொள்வது தொடர்பான தற்போதைய நிலவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போது அவர் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பாதிப்புகளுக்காக, கப்பலின் உரிமையாளர்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினரிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு வழங்குமாறு இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல், 2021ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்ததுடன், ஜூன் 2ஆம் திகதி கடலில் மூழ்கியது.

கப்பலில் இருந்த நச்சு இரசாயனப் பொருட்கள் மற்றும் பெருமளவிலான நெகிழித் துகள்கள் கடலில் கலந்ததன் காரணமாக கடல் சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்வளத் துறைக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டன.

மேலும், கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் கப்பலில் ஏற்பட்ட இரசாயனக் கசிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து கப்பலின் தலைவர் மற்றும் உள்ளூர் முகவர்கள் துறைமுக அதிகாரிகளுக்கு முழுமையான தகவல்களை வழங்கவில்லை என உச்ச நீதிமன்றம் கண்டறிந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நஷ்டஈட்டுத் தொகையை அறவிடுவதற்கும், அது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் சுயாதீனமான நஷ்டஈட்டு ஆணையமொன்றை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நஷ்டஈட்டுத் தொகையின் முதல் கட்டத்தைச் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்கான நஷ்டஈட்டை இலங்கை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் தற்போதைய உண்மையான நிலவரம் என்ன என்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் விளக்கம் கோரியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes