General21 August 2026

மகாத்மா காந்தியின் தனிப்பட்ட சிந்தனைகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்: இந்திய வரலாற்றில் புதிய சாதனை!

மகாத்மா காந்தி தனது நெருங்கிய நண்பரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிகோரணிக்கு எழுதிய 688 அரிய கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு, சாஃப்ரனாட் ஏல நிறுவனத்தின் மூலம் ரூ.16.20 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றுடன் தொடர்புடைய ஆவணம் ஒன்று ஏலத்தில் விற்பனையானதற்கான உலக சாதனையாக இது அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை, அகிம்சை, சேவை, பிரம்மச்சரியம் மற்றும் ஒழுக்கம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் தொடர்பாக மகாத்மா காந்தி எழுதிய தினசரி குறிப்புகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஹிகோரணியின் மனைவி வித்யா மறைந்த பின்னர், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மகாத்மா காந்தி அவருக்கு வழங்கிய தினசரி வழிகாட்டுதல்கள் மற்றும் சிந்தனைகள் பின்னர் ‘A Thought for the Day’ என்ற புத்தகமாகத் தொகுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

‘ஆனந்த் டி. ஹிகோரணி சேகரிப்பு’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஏலத்தில், மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட 86 ஆவணங்கள் இடம்பெற்றிருந்தன.

மகாத்மா காந்தியின் பொதுவாழ்க்கை மட்டுமன்றி, அவரது தனிப்பட்ட சிந்தனைகள் மற்றும் மனிதநேயப் பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் முக்கியமான வரலாற்று ஆவணத் தொகுப்பாக இது அமைந்துள்ளதாக ஏல நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes