General25 August 2026

நீர்விநியோகம் அவசரமாக இடைநிறுத்தப்பட்டது ஏன்? களனி கங்கையில் இரசாயனம் கலந்ததா?

அவசர நிலைமையால் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளில் தற்காலிகமாகத் தடைப்பட்டிருந்த குடிநீர் விநியோகம் தற்போது முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

அம்பத்தலை மற்றும் பியகம ஆகிய பிரதான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அருகில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றிலிருந்து சுற்றுச்சூழலுக்கு ஏதேனுமொரு கழிவு அல்லது இரசாயனம் வெளியேற்றப்பட்டுள்ளதாக நேற்றிரவு 11.30 அளவில் தகவல் கிடைத்தது.

எனவே, அவை களனி கங்கையில் கலந்திருக்கலா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து உடனடியாகத் நீர்விநியோகம் இடைநிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு தகவல் வழங்கியதுடன், நீர்வழங்கல் சபையின் இரசாயனப் பொறியியலாளர்கள் உடனடியாக களனி கங்கையின் பல்வேறு இடங்களிலிருந்து மாதிரிகளைப் பெற்று பரிசோதனைகளை மேற்கொண்டு நீரின் தரத்தை உறுதிப்படுத்தும் பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.

பரிசோதனைகளின் முடிவில் நீர் பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, காலை 4.30 அளவில் அம்பத்தலை மற்றும் பியகம சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய, கொழும்பு நகரின் பல பகுதிகளுக்குக் காலை 7 மணியளவிலும், கோட்டை, பத்தரமுல்லை மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளுக்குக் காலை 9 மணியளவிலும் நீர் விநியோகம் மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன், பியகம, களனி மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகமும் காலை 6 மணிமுதல் வழமைக்குத் கொண்டுவரப்பட்டுள்ளது.

களனி கங்கையை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பைக் உறுதி செய்வதற்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த அனர்த்தம் குறித்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பாதுகாப்புப் படைகள் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வழமையாக ஒவ்வொரு தடவையும் சுத்திகரிப்புக்காக பெறப்படும் நீர் மற்றும் சுத்திகரிப்பின் பின்னர் விநியோகிக்கப்படும் நீர் ஆகியவற்றின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்படும் எனவும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes