General25 August 2026

கெஹெல்பத்தர பத்மேவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே எனப்படும் கோரளகமகே மன்தினு பத்மசிறி பெரேரா என்பவரை எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி இந்தோனேசியாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இவர், தொடர்ச்சியாகத் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், தடுப்புக் காவல் காலம் நிறைவடைந்ததை அடுத்து இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பலத்த பாதுகாப்புடன் சந்தேகநபர் நீதிமன்றில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்தே கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதனிடையே, கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவத்துடனும் தொடர்புடைய இந்தச் சந்தேகநபர், அந்தக் கொலை வழக்கின் 18ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.

அத்துடன், அந்த வழக்கு மீண்டும் அழைக்கப்படும் எதிர்வரும் 4ஆம் திகதியன்று சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes