General27 August 2026

கனடா வேலைவாய்ப்பு விசா காட்டிப் பெருமளவு மோசடி - ஹிரு CIA வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது!

கனடாவில் வேலைவாய்ப்பு வழங்கி அங்கு குடியேற்றுவதாகக் கூறி, போலியான ஆவணங்களை வழங்கி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யும் ஊழல் வலையமைப்பு ஒன்று தற்போது பல பகுதிகளில் செயற்பட்டு வருகிறது.

துபாயில் இருந்து இயக்கப்படும் இந்த மோசடியில் பெருமளவு இளைஞர், யுவதிகளே இலக்கு வைக்கப்படுகின்றனர்.

இந்த மோசடியை ஹிரு CIA வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.

கனடாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறித் தமிழ் இளைஞர், யுவதிகளை அதிகம் இந்த மோசடியில் சிக்க வைக்க முக்கியத் திட்டங்கள் துபாயில் உள்ள நபர் ஒருவரால் செயற்படுத்தப்படுகின்றன.

தன்னுடன் தொலைபேசி அழைப்பு மூலம் தொடர்புகொண்ட பெண்ணொருவருக்கு கனடாவில் வேலைவாய்ப்பு வழங்கும் முறை குறித்து அந்த நபர் வெளிப்படுத்தியிருந்தார்.

அப்போது கொழும்பில் இருக்கும் இருவருடன் பேசுமாறு அவர் கூறியிருந்தார்.

அந்த இருவரும் வயதானவர்கள் என்றும், மொத்தத் தொகை 45 இலட்சம் ரூபாய் என்றும் அவர்கள் இருவரும் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய, இருவரும் கனடா வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருந்த இளைஞர், யுவதிகளைக் கொழும்புக்கு வரவழைத்து கைவிரல் ரேகைகளைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதனிடையே, கைவிரல் ரேகைகளுக்காகவும், விசா மற்றும் விமான பயணச்சீட்டுகளுக்காகவும் இந்த மோசடியுடன் தொடர்புடைய வயதான இருவரும் இளைஞர்களிடம் சுமார் 50 இலட்சம் ரூபாய் தொகையைப் பெற்றுள்ளனர்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் கனடா வேலைவாய்ப்புகளுக்காக இளைஞர்களிடம் பணம் பெற்ற இந்த நபர்கள், பின்னர் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்காமல் இளைஞர்களைத் தவிர்த்து வந்துள்ளனர்.

இதையடுத்து, இந்த வேலைவாய்ப்பு விசாக்கள் குறித்துச் சந்தேகம் கொண்ட இளைஞர்கள், இங்கிருக்கும் கனடா தூதரகத்துக்கு இந்த விசாக்களைக் கொண்டு சென்று விசாரித்தபோது, அவை போலியாகத் தயாரிக்கப்பட்ட விசாக்கள் என அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போலியான கனடா விசா மோசடி ஹிரு CIA ஊடாக வெளிப்படுத்தப்பட உள்ளமை தெரியவந்ததும், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வட்ஸ்அப் ஊடாகக் குரல் பதிவு ஒன்றை அனுப்பி துபாயில் உள்ள பிரதான மோசடிக்காரர் மிரட்டல் விடுத்திருந்தார்.

"நீ தெரிந்து கொள், நீ இருக்கும் இடம் எனக்கு தெரியும், அதிகமாகத் துடிக்க வேண்டாம். நாங்கள் யார் என்று உனக்குத் தெரியாது. உன்னைவிட மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். உன்னைவிட மனிதர்களிடமிருந்து நான் பணத்தையும் வாங்கியிருக்கிறேன். அதிகமாகத் துடிக்க வேண்டாம்.. அவ்வளவுதான்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மோசடிக்காரர்களின் நாளைய இரையாக நீங்கள் மாறக்கூடும் என்பதால், எங்களது இந்த வெளிப்படுத்தல் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உங்களைப் பாதுகாப்பதற்காகவே ஆகும்.
Related recommendation
Hiru TV News | Programmes