International29 August 2026

பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு வேதனத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குவது தொடர்பாக, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர் தமிழக அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், நீதிமன்றமே தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு வேதனத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த நர்மதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

கர்நாடகா, பீகார், ஒடிசா மற்றும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் இதுபோன்ற கொள்கை நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருவதால், அது நிறைவடைந்த பின்னர் இதுதொடர்பாக அரசு உரிய முடிவை எடுக்கும் என அரசுத் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்குவது தொடர்பாக அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

அவ்வாறு அரசு முடிவெடுக்கத் தவறினால், நீதிமன்றமே தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும் என எச்சரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
Related recommendation
Hiru TV News | Programmes