General29 August 2026

ஐ.நா எழுப்பிய கவலைகளுக்கு இலங்கை பதில்!

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் சட்டமூலங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் எழுப்பிய கவலைகளுக்கு இலங்கை அரசு விளக்கமளித்துள்ளது.

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின்படி, உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 இல் இருந்து 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இல் இருந்து 65 ஆகவும் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதம நீதியரசர் தனது 67வது வயதிலோ அல்லது நீதியரசராக நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து 6 ஆண்டுகள் பூர்த்தியடையும் போதோ ஓய்வுபெறுவார்.

அதேநேரம், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 19 இல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

அதேவேளை, நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் மூலம் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இல் இருந்து 63 ஆக உயர்த்தப்படுவதோடு, ஏனைய நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் கட்டாய ஓய்வுபெறும் வயது 62 ஆக நிர்ணயிக்கப்படவுள்ளது.

மேலும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 110 இல் இருந்து 120 ஆக அதிகரிக்கப்படும். இவ்விரு சட்டமூலங்களும் கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டன.

முன்னதாக, நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் குறித்த ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட் அனுப்பிய கடிதத்தில், பதவி வகிக்கும் நீதிபதிகளுக்கு இம்மாற்றங்களைப் பயன்படுத்துவது நீதித்துறை சுதந்திரம் மற்றும் அதிகாரப் பகிர்வைப் பாதிக்கும் எனக் கவலை வெளியிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள அரசாங்கம், குறிப்பிட்ட சில நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்கும் நோக்கத்திலோ அல்லது நீதித்துறையின் அமைப்பை உடனடியாக மாற்றும் நோக்கத்திலோ இந்தச் சட்டமூலங்கள் கொண்டுவரப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் நிலையில், அனுபவமிக்க நீதிபதிகளைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்காகவே தற்போதைய நீதிபதிகளுக்கும் ஓய்வுபெறும் வயது உயர்வு பொருந்தும் வகையில் செய்யப்பட்டுள்ளதாக அரசு நியாயப்படுத்தியுள்ளது.

இந்த மாற்றங்கள் மூலம் நிறைவேற்று அதிகாரம் நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்பதால், இது சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளுக்கு உட்பட்டே அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்தச் சட்டமூலங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அரசாங்கம், உயர் நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பையும் முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ளதோடு, நீதித்துறை சுதந்திரத்தைப் பேணத் தொடர்ந்து உறுதியளிப்பதாகவும் ஐ.நா.விடம் குறிப்பிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes