General30 August 2026

இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடு - சட்டத்தை மீறினால் அதிரடி நடவடிக்கை!

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒலி மாசுபாடானது குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பெரும் சுகாதார மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் 38/2005 இலக்க கட்டளை மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆம் பிரிவின் கீழ், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிப் பயன்பாடானது பொது தொல்லையாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருப்பினும், திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு ஒரு மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 வரையிலும் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.

எனினும், விசேட சட்டரீதியான அனுமதிகள் வழங்கப்பட்ட குறிப்பிட்ட மத அல்லது விசேட நிகழ்வுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெறப்பட்டிருந்தாலும் ஒலி குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், மீறுபவர்களின் ஒலிபெருக்கிச் சாதனங்களைக் கைப்பற்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஒலி மாசுபாடு தொடர்பில் 118 அல்லது 119 ஆகிய அவசர இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.


Related recommendation
Hiru TV News | Programmes