General31 August 2026

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது: பிரதான காரணத்தை வெளியிட்ட கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமைக்கான காரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது.

நிதியமைச்சராகப் பதவியில் இருந்த காலப்பகுதியில், நிதி அமைச்சின் சிறப்புத் திட்டம் என்ற பெயரில் தேசிய லொத்தர் சபையின் ஊடாக முறையற்ற விதத்தில் மூன்று பேரை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொண்டு அரச நிதியை முறைகேடு செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி முதல் 2017 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், அப்போதைய தேசிய லொத்தர் சபையின் தலைவி ஷமிலா பெரேராவுடன் இணைந்து, இரு ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் ஒரு முகாமைத்துவ உதவியாளர் ஆகியோரை ரவி கருணாநாயக்க நியமித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நபர்கள் தேசிய லொத்தர் சபைக்கு எத்தகைய சேவையையும் வழங்காத போதிலும், அதன் நிதியிலிருந்து அவர்களுக்குச் சம்பளமும் படிகளும் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

திருத்தப்பட்ட 1994 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கையூட்டல் அல்லது ஊழல் சம்மந்தமான ஆணைக்குழுச் சட்டத்தின் 70 ஆம் பிரிவின் கீழ் இந்தச் செயல் ஊழலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes