General31 August 2026

வலுவடையும் எல் நினோ - அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை!

தெற்காசியாவில் எதிர்வரும் மாதங்களில் எல்நினோ காலநிலை மற்றும் பொருளாதார ரீதியாக அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக ஐக்கிய நாடுகளின் புதிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம், உலக வானிலை அமைப்பு, ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளன.

செப்டம்பர் முதல் நவம்பர் வரையான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கையில், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் “உயர்ந்த கவலை” என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எல் நினோ வலுவடைந்து வருவதன் காரணமாக இந்த நாடுகளில் வழக்கத்தை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

காலநிலை மற்றும் பொருளாதார அழுத்தங்கள் ஏற்கனவே ஒன்றுடன் ஒன்று இணைந்து தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நாடுகளாக இலங்கையும் பாகிஸ்தானும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் நெருக்கடிக்கு முந்தைய நிலையை விட முறையே சுமார் 44 மற்றும் 41 சதவீதம் அதிகமாக உள்ளதுடன், பணவீக்கம் சுமார் 6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை, அக்டோபர் முதல் ஜனவரி வரையான காலப்பகுதி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்தக் காலத்தில் பொதுவாக இரண்டாவது இடைப்பருவப் பருவமழை காரணமாக நாட்டில் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும்.

இதே காலப்பகுதியிலேயே பெரும்போக நெல் அறுவடை இடம்பெறுவதால், கனமழை அல்லது வெள்ளத்துடன் அதிகரித்த எரிபொருள் மற்றும் உரச் செலவுகள் இணைந்து விவசாயிகளுக்கு மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய நாடுகள் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

எதிர்வரும் மாதங்களில் நிலைமையை நெருக்கமாகக் கண்காணிக்குமாறும், இலங்கைக்கு ஏற்படக்கூடிய குறிப்பிட்ட அபாயங்களைத் துல்லியமாக மதிப்பிடுவதற்காக விரிவான நாடுகள் மட்ட ஆய்வு அவசியம் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes