General07 September 2026

விளக்கமறியலில் உள்ள நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி! - சிறைச்சாலைகள் ஆணைக்குழு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவை உட்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் வளாகத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவரைச் சந்திப்பதற்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 3 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.

கடந்த 04ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes