General11 September 2026

சிம் அட்டைப் பதிவு விதிகளில் புதிய திருத்தங்களைக் கொண்டுவரத் திட்டம்

சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதையடுத்து, சிம் அட்டைப் பதிவு விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டுவர இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

புதிய விதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, புதிதாக சிம் அட்டைகளை கொள்வனவு செய்யும் நபர்கள், மேம்படுத்தப்பட்ட அடையாளச் சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, புதிய சிம் அட்டை பெறுபவர்களின் நேரலை புகைப்படம் உள்ளிட்ட மேலதிக அடையாளத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக போலியான அல்லது பிற நபர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2027ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டை பயனாளர்கள் அனைவருக்கும் நூறு சதவீத அடையாளச் சரிபார்ப்பை உறுதி செய்வதை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு இலக்காகக் கொண்டுள்ளதாக பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes