General12 September 2026

தெஹிவளை குண்டுத்தாக்குதல் : பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகள் அடையாளம்!

தெஹிவளை - கல்கிஸ்ஸ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய சூத்திரதாரிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் சஜீவ மெதிவத்த தெரிவித்துள்ளார்.

மொரட்டுவையில் நேற்று (11) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள அவர்களை விரைவாக நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று அதிகாலை தெஹிவளை - கவுடான, சிறிசங்கபோ வீதியிலுள்ள வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறார்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் அவர்களின் தந்தையின் கால்களில் காயம் ஏற்பட்டது.

காயமடைந்தவரின் சகோதரர், 'படோவிட்ட அசங்க' என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, இந்த கைக்குண்டுத் தாக்குதலை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'கொஸ்மல்லி' என்பவர் நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நபரின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அந்த நபர் வீட்டை மாற்றியதால், அதற்கு அருகில் உள்ள அவரது சகோதரரின் வீட்டின் மீது கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயமடைந்த நபருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes