General13 September 2026

நாய்களைப் பதிவு செய்யத் தவறினால் 2,000 ரூபா அபராதம்: புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

இலங்கையில் விசர்நாய் கடி நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், நாய்களின் தொகையைக் முறைப்படுத்துவதற்குமான "விசர்நாய்கடி ஒழிப்பு மற்றும் நாய்கள் பதிவுச் சட்டமூலம்" வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமுலுக்கு வரும் பட்சத்தில், தற்போது நடைமுறையிலுள்ள விசர்நாய் கடி நோய் கட்டளைச்சட்டம் மற்றும் நாய்கள் பதிவு கட்டளைச்சட்டம் ஆகிய இரண்டும் ரத்து செய்யப்படும்.

இதன்படி, 6 வாரங்களுக்கு மேற்பட்ட நாய்களின் உரிமையாளர்கள் ஆண்டுதோறும் தமது நாய்களுக்கு விசர்நாய் நோய் தடுப்பூசியைச் செலுத்துவதுடன், உரிய உள்ளூராட்சி மன்றங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவின் பின்னர் உள்ளூராட்சி மன்றத்தினால் பதிவு எண் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

பரிசோதனையின் போது அதிகாரிகளிடம் உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கத் தவறினால் முதற்கட்டமாக 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். நியாயமான காரணங்கள் இருப்பின் மேலும் 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும்.

இருப்பினும், குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கத் தவறினால் பதிவுக்கட்டணத்துடன் 2,000 ரூபா அபராதம் விதிக்கப்படும்.

ஆதரவற்ற நாய்களைப் பொறுத்தவரையில், அவற்றுக்குக் கருத்தடை செய்து, அவை குணமடைந்த பின்னர் மீண்டும் பிடிபட்ட இடத்திலேயே கொண்டு சென்று விடுவிப்பதை உள்ளூராட்சி மன்றங்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதேபோன்று, வணிக ரீதியிலான நாய் வளர்ப்பு மையங்கள் உள்ளூராட்சி மன்றங்களிடம் உரிமம் பெற வேண்டும் என்பதுடன், விதியை மீறினால் 10,000 ரூபா வரை அபராதம் அல்லது 2 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

பொது இடங்களில் நாய்களைக் கைவிடுவதும், விசர்நாய் கடி நோயால் பாதிக்கப்பட்ட நாய்களைப் பராமரிப்பதில் தவறிழைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதற்கு 10,000 ரூபா வரை அபராதம் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அத்துடன், நாய்கள் மனிதர்களையோ அல்லது பிற விலங்குகளையோ தாக்கினால் ஏற்படும் சேதங்களுக்கு உரிமையாளரே சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்க வேண்டும்.

மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு தழுவிய ரீதியில் நாய்களுக்கான கணக்கெடுப்பை நடத்தவும் இந்தச் சட்டமூலத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes