General14 September 2026

நாடளாவிய ரீதியில் தீவிரமடையும் டெங்கு - இதுவரை 97,000 பேர் பாதிப்பு!

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 7 மாகாணங்களை உள்ளடக்கிய விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் இன்று (14) முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதிகளவில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள 7 மாகாணங்களில் உள்ள 62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில், இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

நுளம்புகள் பரவும் வீதத்தின் அடிப்படையில், 62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டிய இடங்களை கண்டறிய அதிகாரிகள் விசேட பரிசோதனைகளை நடத்தியுள்ளனர்.

இதேவேளை நடப்பு ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் சுமார் 97,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மருத்துவர் கன்னங்கர சுட்டிக்காட்டினார்.

செப்டம்பர் மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் நாட்டில் 2,146 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes