General14 September 2026

செம்மணி ஆய்வில் சர்வதேச உதவி - விசாரணையில் சர்வதேச தரம்: இலங்கையை வலியுறுத்தும் பிரித்தானியா!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச தரத்துக்கு அமைவான, நம்பகமான மற்றும் வெளிப்படைத்தன்மையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் இலங்கையை வலியுறுத்தியுள்ளதுடன், பொறுப்புக்கூறல் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நாடாளுமன்ற இணையமைச்சர் கிறிஸ் எல்மோர் (Chris Elmore) நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு தொடர்பான முன்னேற்றங்களை பிரித்தானியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதில் சர்வதேச உதவியைப் பெற்றுக்கொள்வது குறித்தும் பரிசீலிக்குமாறு ஊக்கமளிப்பதாகக் கூறினார்.

மேலும், இந்த விசாரணைகளில் அறிவியல் ரீதியான தடம்சார் தடயவியல் பாதுகாப்புகளும் (forensic safeguards), காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் அர்த்தமுள்ள பங்கேற்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்கள் குறித்து பிரித்தானிய உயர் அதிகாரிகள் இலங்கைத் தலைவர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த மே மாதம் இலங்கைப் பிரதமர் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்தபோதும், கடந்த பெப்ரவரி மாதம் பிரித்தானிய முன்னாள் பிரதிப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்தபோதும் இந்த விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையிலும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர், இலங்கை வெளிவிவகார அமைச்சருடனும் யாழ்ப்பாணத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) இலங்கை தொடர்பான முக்கிய நாடுகளின் கூட்டமைப்புக்கு தலைமை தாங்குவதன் மூலமும், ஐநாவின் பொறுப்புக்கூறல் வழிமுறைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலமும் இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய பிரித்தானியா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் கிறிஸ் எல்மோர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes