General16 September 2026

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகளில் புதிய கட்டடங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல்

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைகளில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அதன்படி, கிழக்கு மாகாண மக்களுக்கு விரிவான இருதய நோய் சிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக, திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் 8 மாடிகளைக் கொண்ட புதிய இருதய நோயியல் பிரிவு கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

ஜப்பானின் 'ஜைக்கா' (JICA) அமைப்பின் நிதி பங்களிப்புடன் 2,403 மில்லியன் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், அதிநவீன அறுவை சிகிச்சை கூடங்கள், ஆய்வகங்கள் மற்றும் உள்நோயாளர்/வெளிநோயாளர் பிரிவுகளைக் கொண்டதாக அமையவுள்ளதுடன், இதன் பணிகள் 2028 மே மாதமளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் நிலவும் நோயாளர் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், 600 மில்லியன் ரூபாய் இந்திய அரசின் நிதியுதவியுடன் 4 மாடி மருத்துவ விடுதி தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மின்தூக்கிகள், மருத்துவ வாயு விநியோகக் கட்டமைப்பு (Piped medical gas system) உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் இந்தக் கட்டடம், தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கவும், நோயாளிகளை பிற மருத்துவமனைக்கு மாற்றுவதைக் கட்டுப்படுத்தவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes