General17 September 2026

மட்டக்குளி கொடூர விபத்து: சிற்றூந்து சாரதி கஞ்சா பயன்படுத்தியமை உறுதி

மட்டக்குளி பகுதியில் மூவர் உயிரிழந்த விபத்துடன் தொடர்புடைய சிற்றூந்தை செலுத்திய சாரதி, விபத்து இடம்பெற்ற போது கஞ்சா போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டப்ளியூ. ஜீ. ஜே. சோனதீர இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – மட்டக்குளி, கந்தஉட சந்திப் பகுதியில் நேற்றிரவு பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழந்தனர்.

மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வத்தளை பகுதியில் இருந்து அதிவேகமாகப் பயணித்த சிற்றூந்து ஒன்று, மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் மூன்று உந்துருளிகளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 44 மற்றும் 64 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் கொழும்பு 15 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சிற்றூந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து இடம்பெற்ற போது அவர் கஞ்சா போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes