General19 September 2026

தனது குடும்பத்தாருடன் தொலைபேசியில் உரையாடிய அனோஜன் சிவராசா

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசா, தனது குடும்பத்தாருடன் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளதாக எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

அனோஜனின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இதனை எமது சூரியன் செய்தி பிரிவுக்கு உறுதிப்படுத்தினார்.

இந்த உரையாடலின் போது, தன்னை சாதாரண கைதிகள் தடுத்து வைத்திருக்கும் சிறையில் இருந்து சிறப்பு சிறைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

எனினும், இந்தத் தண்டனை குறித்த அடுத்தக்கட்டம் தொடர்பாக எந்தத் தகவலும் தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அனோஜன் தெரிவித்ததாக குடும்ப உறுப்பினர் எமது செய்தி சேவைக்கு கூறினார்.

இதனிடையே, அனோஜனின் நலனை உறுதிசெய்ய, இராஜதந்திர ரீதியாக தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் எமது சூரியன் செய்தி பிரிவுக்கு இதனை தெரிவித்தார்.

அதேபோன்று, சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன், இலங்கை அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டு பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes