General19 September 2026

BRICS விவகாரத்தில் இலங்கையின் நகர்வு மந்தமா? பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன?

BRICS அமைப்பில் முழுநேர உறுப்பினராக இணைவதற்கு இலங்கை முன்னதாக ஆர்வம் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அந்த முயற்சிகளில் ஒரு வகையான மந்தநிலை காணப்படுவதாக பேராதனிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எம். இஜாஸ் தெரிவித்துள்ளார்.

‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் 2024ஆம் ஆண்டு BRICS அமைப்பில் இணைவதற்கான விண்ணப்ப செயல்முறையை ஆரம்பித்திருந்தது.

2024 ஒக்டோபரில் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற BRICS மாநாட்டில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜயவர்தன கலந்துகொண்டு, BRICS அமைப்புடனான நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவதற்கான இலங்கையின் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இலங்கையின் BRICS உறுப்புரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக வெளியான தகவல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு மறுத்திருந்தது. பல நாடுகளின் விண்ணப்பங்களுடன் இலங்கையின் விண்ணப்பமும் BRICS உறுப்பு நாடுகளால் உரிய காலத்தில் பரிசீலிக்கப்படும் என அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், BRICS அமைப்புடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவதில் இலங்கையின் தற்போதைய நகர்வு குறித்து கேள்விகள் எழுந்துள்ளதாக எம். எம். இஜாஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை, அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய பொருளாதார சக்திகளுடனான உறவுகள் போன்ற காரணிகள், இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, BRICS அமைப்புடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துவதால் ஏற்படக்கூடிய சர்வதேச மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்தும் இலங்கை கவனம் செலுத்த வேண்டிய நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes