Entertainment31 July 2026

"பிடித்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே காத்திருங்கள்" - அல்லு அர்ஜுன்

ஹைதராபாத்தில் நடைபெற்ற ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், இணையத்தில் இடம்பெறும் ரசிகர்களின் மோதல்கள் குறித்துப் பேசிய கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை மற்றும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளன.

அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், "எனது ரசிகர்கள் மற்றும் என்னைப் பிடிக்காதவர்களுக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், அவர்களை வெறுப்பதிலும், இணையத்தில் விவாதிப்பதிலும் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

அவர்களிடம் உங்கள் நேரத்தை 1 சதவீதம் கூட வீணாக்கக் கூடாது. உங்களிடம் 100 ரூபாய் இருந்தால், பிடிக்காத பொருளுக்குச் செலவழிப்பீர்களா? மாட்டீர்கள் அல்லவா!

அதேபோல உங்கள் நேரத்தை உங்களுக்குப் பிடித்த விடயங்களுக்குச் செலவிடுங்கள். அதற்குப் பதிலாக உங்களுக்குப் பிடித்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே போய்க் காத்திருங்கள்" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உரையின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அல்லு அர்ஜுனின் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

பெண்களைப் பின்தொடர்வது தவறான மற்றும் சட்டவிரோதமான செயல் என்பதால், அதனை ஒரு முன்னணி நடிகர் பொதுமேடையில் நகைச்சுவை என்ற பெயரில் ஊக்குவிக்கும் வகையில் பேசியிருப்பது பொறுப்பற்ற செயல் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் செல்வாக்குமிக்க நடிகர், பொதுவெளியில் பேசும்போது அதிக கவனத்துடனும் சமூகப் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes