Sports08 August 2026

இலங்கைத் தொடருக்காக சாய் சுதர்சனுக்குப் பதிலாக இருவர் பரிசீலனை!

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சன் உபாதை காரணமாக விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் இன்னும் முழுமையாகக் குணமடையாத காரணத்தினாலேயே இந்தத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்தியக் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan) அல்லது ஷேக் ரஷீத் (Shaik Rasheed) ஆகிய இருவரில் ஒருவர் இந்திய அணியில் சேர்க்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்ஃபராஸ் கான் ஏற்கனவே பெங்களூரிலுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் மையத்தில் உடற்தகுதிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதேவேளை, அண்மையில் இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட 21 வயதான ஷேக் ரஷீத்தையும் இந்தியத் தெரிவுக்குழு பரிசீலித்து வருகிறது.

சாய் சுதர்சன் விலகியுள்ள நிலையில், தொடக்க ஆட்டத்திற்குப் பிந்தைய 3 ஆம் இலக்கத் துடுப்பாட்ட வரிசையில் தேவ்தத் படிக்கல் களம் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes