மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 23ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் குறித்த இரு அணிகளும் இந்த தொடரில் இதுவரை எவ்வித தோல்விகளையும் சந்திக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய, இங்கிலாந்து மகளிர் அணிகள், தலா 9 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
பாகிஸ்தான் அணிக்கெதிரான நேற்றைய வெற்றியைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதன்படி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி முதலிடத்திற்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.
இதுவரை அவுஸ்திரேலிய, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இதற்கமைய மீதமுள்ள ஒரு இடத்திற்காக இந்தியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் போராடி வருகின்றன.
இந்தநிலையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள இந்திய மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான போட்டி மிக முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.
குறித்த போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான சாதகமான வாய்ப்புகள் ஏற்படக்கூடிய நிலை காணப்படுகின்றது.
அத்துடன் இந்திய மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் இனி வரக்கூடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து, இலங்கை அணி மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாக வாய்ப்புள்ளது.
மேலும் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை மகளிர் அணி குறித்த தொடரிலிருந்து வெளியேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.









