யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது கொடிகாமம் காவல்துறை எமது செய்தி சேவைக்கு இந்த சம்பவத்தை உறுதி செய்தது.
கொடிகாமம் பகுதியில் இன்று இரவு காவல்துறை அதிகாரிகள் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, அந்த வழியாக மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்தை நிறுத்த முற்பட்டுள்ளனர்.
எனினும் உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர் அதிகாரிகளின் கட்டளையை மீறி பயணித்துள்ளார்.
இதனையடுத்தே காவல்துறை அதிகாரிகள் குறித்த உழவு இயந்திரத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக கொடிகாமம் காவல்துறை தெரிவித்தது.
இதன் போது தப்பிச்செல்ல முயற்சித்த உழவு இயந்திர சாரதி காயமடைந்து சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்கான யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் பாலாவி தெற்கு கொடிகாமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மாணிக்கவாசகர் மதுசன் என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.









