சென்னை மாநகரத்தின் 387ஆவது ஆண்டை முன்னிட்டு, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!
101 அடி உயரப் பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், வானூர்தியில் அமர்ந்து எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், வீதிகளுக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும், சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மேம்பாலங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து நிலையங்கள், மெட்ரோ தொடருந்துகள், தகவல் தொழில்நுட்பப் பூங்கா, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனைகள், நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை ரசித்து ரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.
சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!
தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க” எனப் பதிவிட்டுள்ளார்.








