General07 June 2026

சூரிய மின்சக்தி புறக்கணிக்கப்படுகிறதா? – டீசல் மின்னுற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு!

இலங்கையில் சூரிய ஒளி தாராளமாகக் கிடைக்கும் காலப்பகுதிகளிலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தாமல் டீசல் மின்னுற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக முன்னணி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியின்படி, உள்நாட்டு ரூபாயில் மட்டுமே கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்படும் சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களுக்கு முன்னர் ஒரு அலகு மின்சாரத்திற்கு 15 ரூபா முதல் 37 ரூபா வரை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போது சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் சராசரி அலகு விலை 18 முதல் 20 ரூபா வரையிலான மட்டத்திற்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும், இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் வளர்ச்சியை பாதிக்கும் நடவடிக்கையாக இருப்பதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தேசிய புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தியை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் முயற்சிகளுக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் ஊக்கமிழக்கச் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், உலகின் பல நாடுகள் சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில், இலங்கை தொடர்ந்து டீசல் மற்றும் நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தியை நம்பியிருப்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்துவதாக அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் வழங்கினாலும், நடைமுறையில் அதற்கான போதிய முன்னுரிமை வழங்கப்படவில்லை எனவும் குறித்த பத்திரிகை தனது கட்டுரையில் விமர்சித்துள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம், இலங்கை மின்சார சபை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பதில்கள் இதுவரை வெளியாகவில்லை.
Related recommendation
Hiru TV News | Programmes