General19 June 2026

60 மருந்துகளின் விலை திருத்தியமைக்கப்படும் - தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை

நாட்டில் பாவனையிலுள்ள 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைகள் திருத்தியமைக்கப்படவுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் தலைவர், விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

டொலரின் மதிப்பு உயர்வினால் ஏற்பட்டுள்ள சந்தை மாற்றங்கள் காரணமாக, இந்த விலை திருத்தத்தின் கீழ் சில அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைகளை வரையறுக்கும் வர்த்தமானி அறிவித்தல், இதற்கு முன்னர் கடந்த 2023ஆம் ஆண்டிலேயே இறுதியாகத் திருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அங்கீகரிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளை விட அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்களைக் கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைகளை மீறி நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் மருந்தகங்களுக்கு எதிராகத் தராதரமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes