General19 June 2026

உயிர்த்த தாக்குதல் விசாரணை: FBI அறிக்கை எங்கே? ஐக்கிய தேசிய கட்சி கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தற்போதைய அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தாக்குதல் நடந்த காலகட்டத்தில், நாட்டில் புலனாய்வு அமைப்புகளுக்கு இது போன்ற பாரிய சர்வதேச பயங்கரவாதச் சதி குறித்து ஆராய போதிய நிபுணத்துவம் இருக்கவில்லை.

இதன் காரணமாக, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க அரசாங்கத்திடம் இந்த தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேபோன்று, 2019 ஏப்ரல் 22 அன்று அப்போதைய  பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதும் இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI, இலங்கையின் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID), இராணுவ புலனாய்வுத்துறை மற்றும் அரச புலனாய்வுச் சேவை ஆகியவற்றுடன் இணைந்து முழுமையான விசாரணைகளை மேற்கொண்டது.

திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், FBI ஒரு முழுமையான அறிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததுடன், அதனை இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், 2020 நவம்பரில் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் FBI விசேட முகவர் மேரலி ஆர். காட்வின் (Maeralinn R. Godwin) என்பவரால் 71 பக்கங்கள் கொண்ட சத்தியக்கடதாசி தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டு வருட முழுமையான விசாரணைகளின் பின்னர், லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மொஹமட்  நவுபர், மொஹமட்  அன்வர், மொஹமட்  ரிஸ்கான் மற்றும் அகமது மில்ஹான் ஹயாது மொஹமட்  உள்ளிட்ட சந்தேகநபர்கள் அனைவரும் அந்த நேரத்தில் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருந்தனர்.

இந்த விசாரணை தொடர்பான அனைத்து முக்கிய சான்றுகளும், வாக்குமூலங்களும் அமெரிக்க நீதித்துறை மற்றும் FBI வசம் தற்போதும் உள்ளன.

தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து மீண்டும் புதிய விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அமெரிக்கா வசம் உள்ள இந்த முக்கியமான ஆதாரங்களையும் FBI அறிக்கையையும் பெற்றுக்கொள்ள அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா?

அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் அதற்கு அமெரிக்கா அளித்த பதில் என்ன? இன்னும் கோரிக்கை விடுக்கப்படவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன?

இந்த சான்றுகள் அனைத்தும் இலங்கையின் நீதிமன்ற அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes