General19 June 2026

நீதிமன்றத் தடைக்கு மத்தியில் செம்மணியில் மாபெரும் போராட்டம்

செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழிப் பகுதிக்கு நீதியமைச்சர் விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த பகுதியில் வட கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

"நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு" எனும் கோஷத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
முன்னதாக சித்துபாத்தி இந்து மயான சூழல், மாவட்டச் செயலகம் மற்றும் நீதிமன்ற பகுதிகளில் பொதுமக்களின் இயல்பான வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படும் என யாழ்ப்பாணம் காவல்துறையினர் நீதிமன்றில் விண்ணப்பித்திருந்தனர்.

அதற்கிணங்க, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்க பிரதிநிதிகளான சிவகுமார் இளங்கோதை, கனகரஞ்சினி, சிவானந்தன் ஜெனிட்டா, வேலன் சுவாமிகள் மற்றும் ஏனைய அமைப்பினருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, சித்துபாத்தி இந்து மயான ஏ9 வீதி தொடக்கம் பஸ்ரியன் சந்தி வரையிலும், அங்கிருந்து யாழ்ப்பாண காவல்துறை நிலையம் வரையான பிரதான வீதியிலும் வீதி மறியல் செய்வதோ அல்லது தடைகளை ஏற்படுத்துவதோ முற்றாகத் தடை செய்யப்பட்டது.

இந்த நீதிமன்றத் தடை உத்தரவையடுத்து பெருமளவிலான காவல்துறையினர் செம்மணியில் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும், அதற்கு மத்தியிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
Related recommendation
Hiru TV News | Programmes