General20 June 2026

சென்னையில் போலி ஆவணங்களுடன் பெண்ணுடன் தங்கியிருந்த யாழ். இளைஞர் கைது!

சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்கு படகில் சென்று, போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் சென்னை - ஆவடி பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா சென்ற இவர், கன்னியாகுமரி, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தங்கி உணவகங்களில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இதற்கிடையில், போலி ஆவணங்கள் தயாரித்து அதன்மூலம் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளையும் அவர் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆவடி - சேக்காடு பகுதியில் பெண் ஒருவருடன் குறித்த இளைஞர் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அவர் திடீரென மாயமானதாக அந்த பெண் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த இளைஞரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போதே, அவர் விசா இன்றி போலி ஆவணங்களுடன் தங்கியிருந்தமை அம்பலமாகியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞரிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes