General07 July 2026

கண் பார்வை பாதிக்கப்பட்ட மேலும் 4 பேருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா நட்டஈடு!

கண் சத்திரசிகிச்சையின் பின்னர் 'பெட்ரிசிலோன் அசிடேட்' (Prednisolone Acetate) கண்ணுக்கான திரவ மருந்தைப் பயன்படுத்தியதால் கண் பார்வையை இழந்த மேலும் நான்கு நோயாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் வீதம் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 2023 மார்ச் 03 ஆம் திகதி முதல் 2023 மே 16 ஆம் திகதிவரையான காலப்பகுதியில், இந்தத் திரவ மருந்துப் பாவனையால் நுவரெலியா பொது மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை செய்துகொண்ட சிலருக்கு கண் பார்வை இழப்பு அல்லது தொடர்ச்சியான பார்வைக் குறைபாடு ஏற்பட்ட சம்பவங்கள் பதிவாகின.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டு பார்வையை இழந்த 17 நோயாளர்களுக்கு ஏற்கனவே நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த காலப்பகுதியில் நுவரெலியா மருத்துவமனை தவிர்ந்த ஏனைய மருத்துவமனைகளில் கண் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்ட போது, இந்த மருந்தைப் பயன்படுத்தியதால் கண் குறைபாடுகளுக்கு ஆளாகியுள்ள ஏனைய நோயாளர்களைப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசேட தொழில்நுட்பக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழுவினர் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில், விழிப்புலனை இழந்துள்ள மேலும் நான்கு நோயாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு விதந்துரைத்துள்ளனர்.

அதற்கமைய, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட அந்த நான்கு நோயாளர்களுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வீதம் நட்டஈடு செலுத்துவதற்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes