General30 July 2026

மூதூர் படுகொலை நடந்து 20 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை - மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலை!

சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேரின் உயிர் பறிக்கப்பட்ட மூதூர் சம்பவம் இடம்பெற்று 20 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் மீனாக்ஷி கங்குலி மற்றும் அதன் சட்ட மற்றும் கொள்கைப் பிரிவு பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திருகோணமலை - மூதூர் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி, பிரான்ஸைச் சேர்ந்த Action Against Hunger என்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் 17 பணியாளர்கள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று 20 ஆண்டுகள் நிறைவடையவுள்ள போதிலும், இதுவரை குற்றவாளிகள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை என்பது மனித உரிமை அமைப்புகளினாலும் ஊடகவியலாளர்களினாலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மூதூர் பகுதியில் தீவிர மோதல் இடம்பெற்ற காலத்தில், சுனாமி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்த இந்தப் பணியாளர்கள் தமது அலுவலக வளாகத்துக்குள் முடங்கினர்.

ஓகஸ்ட் 4 ஆம் திகதி பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர், 13 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 17 பணியாளர்கள் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் உடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் இந்த சம்பவத்துக்கு புலிகளே காரணம் என அரச தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட போதிலும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பின் (UTHR-J) விரிவான புலனாய்வு அறிக்கைகள், இந்தச் சம்பவத்தில் காவல்துறை மற்றும் கடற்படைப் பிரிவினருக்குத் தொடர்பிருப்பதாகவும், அதனை மூடிமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தன.

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சம்பவம் தொடர்பில், ஆட்சிக்கு வந்த பல அரசாங்கங்கள் விசாரணை நடத்த உறுதியளித்த போதிலும் இதுவரை உரிய நீதி நிலைநாட்டப்படவில்லை.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீண்டகால காத்திருப்புக்கு முடிவுகட்டும் வகையிலும், போர்க்கால மனித உரிமை மீறல் வழக்குகளை விசாரணை செய்யவும் சுயாதீன அரச வழக்குரைஞர் (Independent Prosecutor) கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes