General06 August 2026

மலையகக் கட்சித் தலைவர்களுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு: காணி உரிமை, வீட்டுத்திட்டம் குறித்து பேச்சு!

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர் (Indian-Origin Tamil – IOT) அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு நேற்று (5) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் (India House) நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது மலையக தமிழர் சமூகத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் மற்றும் இந்திய அரசின் பல்வேறு அபிவிருத்தி முன்முயற்சிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள், கடந்த ஏப்ரல் மாதம் இந்திய துணை ஜனாதிபதி மேற்கொண்ட விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் 'டிட்வா' புயலால் மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து இந்திய அரசால் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மீள்கட்டமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகள் குறித்தும் ஆராயப்பட்டது.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான விடயங்களை இந்திய வெளியுறவுச் செயலாளருடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்தார்.

அத்துடன் காணி உரிமை மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சீரற்ற காலநிலை காரணமாக வட்டவளை, அகரப்பத்தனை, நாவலப்பிட்டி உள்ளிட்ட மலையகப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தை அரசாங்கம் தாமதமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes