General05 August 2026

செம்மணியில் திறந்த நீதிமன்ற அமர்வு: புதிதாக மேலும் 8 என்புக்கூடுகள்; இதுவரை 489 என்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வின் நிர்வாக ரீதியான செயல்பாடுகளை ஆராய்வதற்கான விசேட திறந்த நீதிமன்ற அமர்வு இன்று (5) சித்துப்பாத்தி மயான வளாகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நீதவான் லெனின்குமார் முன்னிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த அமர்வு ஆரம்பமானது.

இந்த கலந்துரையாடலில் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்க சட்டத்தரணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பான சட்டத்தரணிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது GPR ரேடார் (Ground Penetrating Radar) பயன்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையையும், அகழ்ந்தெடுக்கப்பட்ட ஏனைய சான்றுப் பொருட்கள் தொடர்பான முழுமையான அறிக்கையையும் நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அகழ்வுப் பணி தொடர்பான மேலதிக கலந்துரையாடல் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களின் பாதுகாப்பை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதேவேளை, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றைய தினம் (5) புதிதாக 8 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 44 ஆவது நாள் அகழ்வுப் பணிகளே இன்று இடம்பெற்றன.

அதற்கமைய, இன்றைய தினம் அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புக்கூடுகளுடன் சேர்த்து இதுவரை மொத்தமாக 489 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இதுவரை 491 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes