International06 September 2026

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - வானூர்தி சேவைகள் இரத்து

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

வானூர்தி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் எரிமலைச் சாம்பல் பரவியதைத் தொடர்ந்து, 209 வானூர்தி சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று காலை மேலும் இரண்டு எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஜகார்த்தா உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வானொலி நிலையங்களின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலை அமைந்துள்ள ஜாவா பகுதியில் சுமார் 20 ஆயிரம் அடி உயரம் வரையிலும், சுமத்ரா பகுதியில் சுமார் 50 ஆயிரம் அடி உயரம் வரையிலும் எரிமலைச் சாம்பல் பரவியுள்ளதாக இந்தோனேசிய வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள இந்தப் பகுதி புவியியல் ரீதியாக மிகவும் ஆபத்தான பகுதியாக கருதப்படுகிறது.

இதனால் அங்கு அடிக்கடி நில அதிர்வுகளும் எரிமலை வெடிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இதேவேளை, பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி விழிப்புடன் செயற்படுமாறும் இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எரிமலைச் சாம்பல் பார்வைத் திறனை குறைக்கக்கூடும் என்பதால், சாம்பல் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் கண் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துமாறும், தேவையற்ற வெளிப்புறப் பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes