General25 October 2025

சூறாவளியாக மாறும் காற்றழுத்தம்

நாட்டின் வடகிழக்கு, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து உருவாகி மேற்கு , வடமேற்கு நோக்கி நகரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
 
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென்கிழக்கு மற்றும் அருகிலுள்ள மத்திய வங்காள விரிகுடாவில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
இது நாளைக்குள் ஆழமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், நாளை மறுநாள் சூறாவளியாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதேவேளை இன்று காலை 06 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் களுத்துறை - நேபொட பகுதியில் 106 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 
 
மேலும் பண்டாரகமவில் 85 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பதுரலிய - மோல்காவில் 70 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. 
 
இதேவேளை இந்தியாவின் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 
 
இதன் காரணமாக வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes