General27 October 2025

"மோந்தா" புயல் தாக்கம் - பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னைக்கு கிழக்கே சுமார் 440 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் "மோந்தா" புயல், மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்துள்ளது. 
 
வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பிராந்தியங்களைப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து "மோந்தா" என்ற புயலாக தீவிரமடைந்துள்ளது. 
 
நேற்றிரவு (ஒக். 26) 11.30 மணிக்கு தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 610 கிலோமீட்டர் தொலைவில், நிலைகொண்டுள்ளது. 
 
இந்நிலையில், தற்போது வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை (ஒக்.28) காலை ஒரு புயலாக மேலும் தீவிரமடைந்து, நாளை மாலை அல்லது இரவு ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
எனவே, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும், கடற்றொழிலாளர்களும் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும், கடலில் பயணம் செய்வோரும் கடற்றொழிலாளர்களும் இவ்விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
இதேவேளை, திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes