General29 November 2025

ஆபத்தான பயணங்களைத் தவிர்க்குமாறு இராணுவத் தளபதி கோரிக்கை!

நாட்டின் பல பாகங்களில் நிலவும் அதிதீவிர காலநிலை காரணமாக அத்தியாவசியமற்ற மற்றும் ஆபத்தான பயணங்களை மக்கள் தவிர்த்துக்கொள்ளுமாறு இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிக்கோ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
இன்று (29) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இராணுவத் தளபதி இந்தக் கோரிக்கையை விடுத்தார். 
 
"மோசமான காலநிலை காரணமாகப் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிருங்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடியது என்பதை உணர்ந்து செயற்படுங்கள்." எனத் தெரிவித்தார். 
 
"நீங்கள் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்வதால் உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்வதுடன், அந்த உயிர்களைக் காப்பாற்ற வரும் இராணுவம், கடற்படை, விமானப்படைப் பணியாளர்களின் உயிர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறீர்கள். 
 
எனவே, அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்." எனக் குறிப்பிட்டார். 
 
"அரசால் வழங்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டால், தயவுசெய்து அந்த இடத்திலிருந்து வெளியேறுங்கள். அவ்வாறு குறிப்பிடப்படுவது ஒரு அனர்த்தம் ஏற்படலாம் என்பதனாலேயே" எனவும் சுட்டிக்காட்டினார். 
 
இராணுவத் தளபதி இந்த வழிகாட்டல்கள் மூலம், மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும், மீட்புப் பணியாளர்களின் பாதுகாப்பையும் வலியுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes