General05 December 2025

அதிதீவிர வானிலையால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு கிடைத்த தீர்வு

அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் பின்னரான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. 
 
இதன்படி, நடமாடும் நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் இரண்டை இலங்கை கடற்படை செயற்படுத்தி வருவதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார். 
 
பேரிடரின் பின்னரான நிலைமை தொடர்பான நடவடிக்கைகளின் பின்னூட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தி, வெளியிடப்பட்ட காணொளியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 
 
கண்டி - தெல்தெனிய மற்றும் புத்தளம் - ஆராச்சிக்கட்டு ஆகிய பகுதிகளில் குறித்த நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் செயற்படுத்தப்படுவதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். 
 
அத்துடன் பொது இடங்களை சுத்திகரித்து, அவற்றை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான செயற்பாடுகளில் கடற்படையின் தொழில்நுட்ப பிரிவு செயற்பட்டு வருகிறது. 
 
இதேவேளை, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளும், நிவாரண செயற்பாடுகளும் கடற்படையினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes