General29 April 2026

சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா?

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் தலைவர் ரோகித் சர்மா, காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிக்கு எதிரான நாளைய போட்டியில் அவர் விளையாடுவது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.

கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணிக்கு எதிரான போட்டியின் போது துடுப்பெடுத்தாடிய ரோகித் சர்மாவுக்குத் தசைநார் பிடிப்பு ஏற்பட்டது.

இதனால் போட்டியின் பாதியிலேயே அவர் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அந்தப் போட்டிக்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய கடந்த மூன்று போட்டிகளிலும் அவர் களமிறங்கவில்லை.

வான்கடே மைதானத்தில் மும்பை அணி மேற்கொண்ட பயிற்சிகளின் போது ரோகித் சர்மா கலந்து கொண்டார்.

அவர் வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் துடுப்பாட்டப் பயிற்சியில் ஈடுபட்டாலும், களத்தில் ஓடுதல் மற்றும் வார்ம்-அப் பயிற்சிகளின் போது அவதானத்துடனேயே காணப்பட்டார்.

இந்த நிலையில், ரோகித் சர்மா வலைப்பயிற்சியில் ஈடுபட்டது சாதகமான ஒன்றாகக் கருதப்பட்டாலும், அவர் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே களமிறக்கப்படுவார்.

முக்கிய போட்டிகள் வரவிருக்கும் நிலையில், ரோகித்தின் விடயத்தில் எவ்வித அவசரமான முடிவையும் எடுக்கவோ அல்லது மேலதிக ஆபத்தை எதிர்கொள்ளவோ அணி நிர்வாகம் தயாராக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையே, நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகத் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுத் தனது உடற்தகுதியை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஜாம்நகர் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய மும்பை அணி வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளைய போட்டியில் ரோகித் சர்மா களமிறங்குவது குறித்து இறுதித் தருணத்திலேயே உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் விளையாடத் தவறும்பட்சத்தில், அது மும்பை அணிக்கு பாரிய பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Related recommendation
Hiru TV News | Programmes