International30 April 2026

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எழிலரசி, தற்போது விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாவதற்கு பதிலாக, காணொளி காட்சி மூலம் முன்னிலையாக அனுமதி வழங்கிய நிலையிலேயே இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, தற்போது ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இந்தத் திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரு தரப்பு சட்டத்தரணிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில், இருவரும் சுமூகமாகப் பிரிந்து செல்வது என முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜீவனாம்சம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான சொத்து பாகப்பிரிவினைகள் குறித்து ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக விஜய்க்கு ஏற்கனவே நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்புச் சூழல் காரணமாக அவர்கள் நேரில் முன்னிலையாவதில் சிக்கல் நிலவியதால், காணொளி மூலம் முன்னிலையாக அனுமதி கோரியிருந்தனர்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள இத்தருணத்தில், அரசியல் மற்றும் திரையுலகில் முக்கிய நபராக இருக்கும் விஜய்யின் இந்த விவாகரத்து வழக்கு விசாரணை மற்றும் நீதிபதி மாற்றம் ஆகியவை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related recommendation
Hiru TV News | Programmes