General30 April 2026

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு : முடிவுகள் வெவ்வேறாக இருப்பதால் தலை சுற்றலில் அரசியல் தலைவர்கள்!

தமிழகத்தில் கடந்த 23 ஆம் திகதி (வியாழக்கிழமை) 17 ஆவது சட்டசபை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

ஏற்கனவே, புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு கடந்த 9 ஆம் திகதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில், தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே மாதம் 4 ஆம் திகதி (திங்கட்கிழமை) எண்ணப்பட இருக்கின்றன.

தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்குமா?

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட மார்ச் 15 ஆம் திகதி வெளியான கருத்து கணிப்புகளில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால், தேர்தல் திகதி நெருங்கும் சமயத்தில் வெளியான கருத்து கணிப்புகளில், அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று கூறப்பட்டன. தமிழக அரசின் உளவுத்துறையும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று அரசுக்கு அறிக்கை கொடுத்ததாக தகவல் வெளியானது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு

ஆனால், வாக்குப்பதிவு நாளான 23 ஆம் திகதி, வாக்களித்தவர்களை வைத்து பார்க்கும்போது, த.வெ.க.வுக்கு அதிக வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் நேற்று 2 ஆவது கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் 5 மாநிலங்களுக்கும் வெளியாகின.

வெவ்வேறு முடிவுகள்

இந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெவ்வேறாக இருந்ததால், அரசியல் தலைவர்கள் தலை சுற்றலில் இருந்து வருகிறார்கள். என்.டி.டி.வி. - பீப்பிள்ஸ் பல்ஸ், மேட்ரிஸ், ரிபபிளிக் பி மார்க், சாணக்கியா ஸ்ட்ராட்டஜிஸ், மும்பை சட்டபஜார், அக்னி, மின்னம்பலம் ஆகிய 7 நிறுவனங்கள், ஆளுங்கட்சியான தி.மு.க.வே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில், வோட் வைப், ஜே.வி.சி. - டைம்ஸ் நவ், சி.என்.என். - நியூஸ் 18 ஆகிய 3 நிறுவனங்கள் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன.

ஆனால், இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

தலைவர்களுக்கு தலை சுற்றல்

இப்படி, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெவ்வேறாக இருப்பதால், "ஆட்சியை பிடிப்போம்" என்ற நம்பிக்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் தலை சுற்றலில் உள்ளனர். ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானதில், தி.மு.க. முன்னிலையில் இருப்பதால், அக்கட்சி நிர்வாகிகள் "வெற்றி நமதே" என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.

அதே நேரத்தில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. நிர்வாகிகளும், புதிய வரவான த.வெ.க. நிர்வாகிகளும் அதே நம்பிக்கையில் இருப்பதால், மே 4 ஆம் திகதி தேர்தல் முடிவு எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே தமிழக மக்களிடம் இருந்து வருகிறது.

தேர்தல் முடிவு வந்த பிறகுதான், எந்த நிறுவனத்தின் கருத்து கணிப்பு சரியானது, எந்த நிறுவனத்தின் கருத்து கணிப்பு தவறானது என்பது வெளிச்சத்துக்கு வரும். ஆகையால் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி மக்கள் ஆர்வத்தில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes