General30 April 2026

அக்கரைப்பற்றில் இரவு நேர உணவகங்கள் அதிரடிச் சோதனை: 7 உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

அக்கரைப்பற்று பிரதேசத்தில் பொதுமக்களுக்குச் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அங்குள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் நேற்று இரவு அதிரடிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீ சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைவாக, அக்கரைப்பற்று சுகாதார மருத்துவ அதிகாரி எம்.ரீ. ஜாரியா தலைமையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மொத்தம் 28 உணவகங்கள் விரிவாகச் சோதனை செய்யப்பட்டன. குறிப்பாகச் சமையலறைகள், உணவுத் தயாரிப்பு இடங்கள் மற்றும் களஞ்சிய அறைகளின் தூய்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குறித்த சோதனையின் போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையிலும், சுகாதாரச் சீர்கேடான நிலையிலும் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான உணவுகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அந்த இடத்திலேயே அழிக்கப்பட்டன.

அத்துடன், சுகாதார விதிகளை மிகவும் மோசமான முறையில் மீறிச் செயற்பட்ட 07 உணவக உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய உணவக உரிமையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள், சமையலறை பராமரிப்பு மற்றும் தூய்மையான சூழலைப் பேணுவது குறித்துத் தெளிவான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இவ்வாறான தொடர்ச்சியான சோதனைகள் முன்னெடுக்கப்படும் எனச் சுகாதார அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes