General01 May 2026

ஜனவரியில் தெரிந்த ஆபத்து.. மார்ச்சில் உறுதி செய்த அதிகாரிகள்! – திறைசேரியின் அலட்சியம் அம்பலம்

திறைசேரியினால் அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு அனுப்பப்பட்ட 2.5மில்லியன் டொலர்கள் காணாமல் போனமை தொடர்பில், நிதியமைச்சுக்கு ஒரு மாதக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆதாரங்களுடன் கூடிய முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக இந்த ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த நிதி மீட்கப்படாவிட்டால், அதன் சுமை இறுதியில் வரி செலுத்துவோர் மீது விழக்கூடும் என்று பொது நிதி மீதான குழுவின் தலைவரும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு சம்பந்தப்பட்ட தரப்பினருக்குச் செலுத்தப்பட வேண்டிய 10 அரச கடன் திருப்பிச் செலுத்தும் பரிவர்த்தனைகள் உரிய பெறுநரைச் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், நிதியமைச்சின் அதிகாரிகள் குழு, நேற்று, நாடாளுமன்ற பொது நிதி மீதான குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதில், திறைச் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும மற்றும் சிரேஷ்ட நிதி அமைச்சக அதிகாரிகள், சிரேஷ்ட மத்திய வங்கி அதிகாரிகள் முன்னிலையாகினர்.

இதன்போது, ஜனவரி மாதத்திலேயே அபாய அறிகுறிகள் தோன்றியதாகவும், ஆனால் மார்ச் மாதத்தில்தான் அவுஸ்திரேலியாவில் உள்ள சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எந்தப் பணமும் சென்றடையவில்லை என்பதை அதிகாரிகள் நேரடியாக உறுதிப்படுத்தியதாக ஹர்ச டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் .இந்த விடயத்தை நாடாளுமன்றத்திற்கும் குழுவுக்கு ஏன் முன்னதாகத் தெரிவிக்கப்படவில்லை என்பது உட்பட, செயல்முறைகளில் கடுமையான குறைபாடுகளைக் குழு கண்டறிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையி;ல் 2025, நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட அந்த 10 பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சகத்தால் உள் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும்,அதே நேரத்தில் குற்றப்புலனாய்வுத்துறையினர் மற்றும் நீதிமன்றங்கள் பொறுப்பானவர்களைத் தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes