International03 May 2026

தண்ணீர் கொண்டுவர மறுத்த சிறுவன் சுட்டுக்கொலை!

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் யகுத்கஞ்ச் கிராமத்தில் நடைபெற்ற குடும்ப விழாவொன்றின்போது, உறவினர் ஒருவர் 9 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற பெயர் சூட்டும் விழாவில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

அந்த விழாவில் கலந்துகொண்டிருந்த மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் உறவினர் ஒருவர் அங்கிருந்த 9 வயது சிறுவனிடம் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வருமாறு கேட்டுள்ளார்.

எனினும், சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த குறித்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சிறுவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவனை உடனடியாக மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அலிகார் நகரில் உள்ள மருத்துவமனைக்குச் சிறுவன் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes