General07 May 2026

அவுஸ்திரேலியாவில் விசா கட்டுப்பாடுகள் தீவிரம்: இலங்கை மாணவர்கள் பலருக்கும் சிக்கல்

சர்வதேச மாணவர்களுக்கான விசா அனுமதியை அவுஸ்திரேலியா பாரியளவில் கட்டுப்படுத்தி வரும் நிலையில், அதிகமான இலங்கை மாணவர்களின் விசாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களை நிராகரிப்பதில் அவுஸ்திரேலியா சாதனை அளவை எட்டியுள்ளது.

2026 பெப்ரவரி மாதத்தில் பல்கலைக்கழக மாணவர் விசா நிராகரிப்பு வீதம் 32.5 வீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த அளவாகும் (2025 இல் இது 15.5 வீதமாக மட்டுமே இருந்தது).

இதனால் இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து விண்ணப்பித்த மாணவர்களில் 38 வீதமானோரின் விசாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக 'த நோட்டிசர்' அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 34,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு (கொவிட் காலத்தைத் தவிர்த்து) பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் விசா சிக்கல்கள் நிலவும் நிலையில், இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி நடைமுறைகள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

2025 உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

பல்கலைக்கழக அனுமதி கையேட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விற்பனை நிலையங்களில் அல்லது இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இம்முறை 176,527 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் மாணவர் பதிவுப் பட்டியல்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

2025, 2026 கல்வியாண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்ட பின்னர், ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தமது ஆரம்பத் திகதிகளைத் தீர்மானிக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes