General12 May 2026

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் - வெளியான முக்கிய அறிவிப்பு

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆபத்தான நிலையில் உள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் வசந்த சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் மொத்த நீர்த்தேக்க கொள்ளளவில் சுமார் 65 சதவீதம் நிரம்பியுள்ளது.

இதில் 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 12 நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் ஏற்கனவே வான்பாய்ந்து வருகின்றன.

தற்போதைய நிலையில் நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்படுவதால் பெரிய அளவிலான வெள்ள அபாயம் இதுவரை ஏற்படவில்லை.

இருப்பினும், எதிர்வரும் நாட்களில் மழை அதிகரித்தால் நீர் வெளியேற்றத்தின் அளவு அதிகரிக்கப்படலாம்.

குறுகிய நேரத்தில் பெய்யும் கடும் மழை காரணமாக, ஆறுகள் இல்லாத தாழ்நிலப் பகுதிகளில் கூட திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இது தற்போது வட அட்சரேகை 10.1 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 82.5 ஆகிய பகுதிகளுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் மழையுடனான காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், கடற்படையினர் மற்றும் கடற்றொழில் சமூகத்தினர் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்புகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes