General24 May 2026

கரடியனாறு காவல்துறை தடுப்புக்காவலில் இருந்த நபர் திடீர் மரணம் : விசாரணைகள் தீவிரம்!

மட்டக்களப்பு, கரடியனாறு காவல் நிலையத்தில், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.

இந்தச்சம்பவம் கரடியனாறு காவல் நிலையத்தில் நடந்தமையால் வேறு காவல்நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விசாரணைக்கு பின்னரே அவரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என்றும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.

முன்னதாக, கரடியனாறு, கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே மரணமானார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வவுணதீவு காவல்துறை குழுவொன்று கரடியனாறு காவல் நிலையத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த நபர் மதுபானம் அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில், அவரது மனைவியால் கரடியனாறு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டிற்கு அமையவே, அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக, கரடியனாறு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes