General04 June 2026

பொன் சிவகுமாரன் நினைவேந்தல் ஏற்பாடு: பிரதேச சபை தவிசாளரிடம் காவல்துறை விசாரணை

யாழ்ப்பாணம், உரும்பிராயில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொன் சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக உயிர்த்தியாகம் செய்த பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை எடுத்த தீர்மானத்துக்கு அமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு உரும்பிராயில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பிரதேச சபைக்குச் சொந்தமான சந்தை வளாகத்தில் சபை உறுப்பினர்கள், உரும்பிராய் பகுதி இளைஞர்கள் மற்றும் உணர்வாளர்கள் ஒன்றிணைந்து இந்த நினைவேந்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த புலனாய்வாளர்கள், படம் மற்றும் காணொளிகளைப் பதிவு செய்து வந்ததைத் தொடர்ந்து, கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் தவிசாளர் தியாகராஜா நிரோஷை கோப்பாய் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள தவிசாளர் தியாகராஜா நிரோஷ், நினைவேந்தல்களுக்குத் தடையில்லை என அரசாங்கம் வாய்வார்த்தையாகக் கூறினாலும், நடைமுறையில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகளைக்கூட அங்கீகரிக்க மறுக்கும் போக்கே நீடிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes