General04 June 2026

ஹொரணை முதியோர் இல்ல தீப்பரவல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு!

களுத்துறை - ஹொரணை, கல்பாத பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்து நேர்ந்த போது குறித்த முதியோர் இல்லத்தில் 72 வயோதிபர்கள் தங்கியிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தீப்பரவல் ஏற்பட்ட உடனடியாகவே விரைந்து செயற்பட்ட மீட்புக்குழுவினர் மற்றும் காவல்துறையினர், அங்கிருந்த 44 முதியவர்களை எவ்வித உயிராபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

தீப்பரவலை தொடர்ந்து 11 வயோதிபர்கள் திடீரென காணாமல் போயிருந்த நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

தேடுதலின் போது நேற்று சிலரது உடலங்கள் மாத்திரம் கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காணாமல் போன 11 பேருமே உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தத் தீபரவலால் படுகாயமடைந்த மேலும் 8 பேர் மீட்கப்பட்டு, அவசர சிகிச்சைக்காக ஹொரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதியோர் இல்லத்தில் இந்தத் திடீர் தீப்பரவலுக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், விபத்துக்கான பின்னணி குறித்து கண்டறிவதற்காகக் காவல்துறையினர் பல கோணங்களில் தங்களது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes